×

கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணிகள் தங்கம் வென்றன

கோவை: விளையாடு (கேலோ) இந்தியா இளையோர் போட்டியின் கூடைப்பந்து இறுதி ஆட்டங்கள் கோவையில் நடந்தன. பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் பஞ்சாப் அணி முன்னிலைப் பெற்றாலும், 2வது பாதியில் தமிழ்நாடு வீராங்கனைகள் அசத்தலாக விளையாடினர். அதனால் 70-66 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி அபராமாக வென்று தங்கத்தை கைப்பற்றினர். கேலோ இந்தியா இளையோர் போட்டிகளில் தமிழ்நாடு பெண்கள் 2வது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளனர். ஆண்களுக்கான கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, தமிழ்நாடு அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர்கள் 86-85 என்ற புள்ளிக்கணக்கில் நூலிழையில் வென்று தங்கத்தை கைப்பற்றியது.

பின்னர் வெற்றி பெற்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தங்க பதக்கம் மற்றும் கோப்பையை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார். மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் அருணா, ரகு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குனர் சீனிவாஸ் மளேக்கர், இந்திய கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் தொழில்நுட்ப ஆணையத் தலைவர் நார்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணிகள் தங்கம் வென்றன appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Coimbatore ,Celo ,India Youth Basketball ,Punjab ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ்